கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவியை, ஆசிரியர்கள் 3 பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியது. பெற்றோரின் புகாரை அடுத்து அதே பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் சின்னசாமி, ஆறுமுகம், பிரகாஷ் ஆகிய 3 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மணப்பாறைப்பட்டி சாலையில் உள்ள தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் 4ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்ட வழக்கில் பள்ளி முதல்வர் உள்ளிட்ட 5 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
இதுபோன்று பள்ளிகளில் பாலியல் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் இதற்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள், சமூக அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்நிலையில் இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சியில் பேட்டியளித்த கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்,
“தமிழ்நாட்டில் பாலியல் சம்பவங்கள் எங்கும் நடக்கமால் இருக்க தமிழ்நாடு அரசால் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. பாலியல் சம்பவங்களில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் யாராக இருந்தாலும் காவல்துறை மூலமாக கடும் தண்டனை பெற்றுத் தரப்படும். பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மட்டுமன்றி அவர்களின் கல்விச்சான்றுகள் ரத்து செய்யப்படும். காவல்துறையும், பள்ளிக்கல்வித் துறையும் இணைந்து இதுபோன்ற செயல்கள் நடக்காமல் இருக்க, அனைத்து முயற்சிகளையும் எடுப்போம்” என்று கூறினார்.