ஹைதராபாத்: ஆந்திரப் பிரதேசத்தின் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக, மாநிலத்தின் தலைநகராக அமராவதியை அறிவிக்கும் சந்திரபாபு நாயுடுவின் நீண்ட நாள் கனவு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அண்மையில் ‘ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்பு (திருத்தச்) சட்டம், 2026’-க்கு ஒப்புதல் அளித்ததன் மூலம் நிறைவேறி உள்ளது. இதன்மூலம், அமராவதி ஆந்திர மாநிலத் தலைநகராகச் செயல்படுவதற்கு முறையான சட்ட அங்கீகாரம் கிடைத்துள்ளது. இது நாயுடுவின் மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. ஆனால் இனிமேல் தான் சவாலே ஆரம்பம் ஆகி உள்ளது.

ஆந்திரா புதிய மாநிலமாக உருவான போது ஹைதராபாத் போல் புதிய தலைநகரை உருவாக்க சந்திரபாபு நாயுடு விரும்பினார். அதற்காக அமராவதி என்று ஒரு தலைநகரை விஜயவாடாவில் இருந்து 20 கிலோ மீட்டர் தள்ளி உருவாக்கினார். ஆனால் 2019ல் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக்கு வந்த பின்னர் திட்டம் முடங்கியது. மறுபடியும் 2024ல் நாயுடு ஆட்சிக்கு வந்த பின்னர் அமராவதி தலைநகர் திட்டம் வேகமெடுத்தது.
ஒரு வழியாக அண்மையில் நாடாளுமன்றத்தில் அமராவதியை ஆந்திர மாநில தலைநகராக அறிவிக்கும் ‘ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்பு (திருத்தச்) சட்டம், 2026’-க்கு ஒப்புதல் பெறப்பட்டது. இதற்கு குடியரசு தலைவரும் ஒப்புதல் அளித்தார். இதனால் அரசிதழில் அமராவதி தான் தலைநகர் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கனவு நிறைவேறி உள்ளது.
பிரதமர் மோடிக்கு நன்றி

இதனை வரவேற்ற ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குத் தனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்தார். மேலும், இது மக்களின் நீண்ட நாள் விருப்பம் நிறைவேறிவிட்டதாக நெகிழ்ந்தார். இச்சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவருவதில் தொடர்ந்து ஆதரவும் வழிகாட்டுதலும் வழங்கிய, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கும் அவர் நன்றியும் தெரிவித்தார்.
நன்றி சொன்ன நாயுடு
இச்சட்ட மசோதாவிற்கு ஆதரவளித்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், இம்முக்கிய விவகாரத்தில் ஒன்றுபட்டு நின்ற மாநிலத் தலைவர்களுக்கும், பொதுமக்களுக்கும் நாயுடு தனது பாராட்டைத் தெரிவித்தார். இத்தருணத்தின் உணர்வுபூர்வமான மற்றும் பொருளாதார முக்கியத்துவத்தை வலியுறுத்திய நாயுடு, இந்த முன்னேற்றத்தை “ஆந்திரப் பிரதேச மக்களுக்குக் கிடைத்த வெற்றி” என்று வர்ணித்தார். குறிப்பாக, தங்கள் தியாகங்கள் மற்றும் தொடர் ஆதரவின் மூலம் இம்முயற்சியில் முக்கியப் பங்காற்றிய அமராவதி விவசாயிகளையும் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்துள்ளார். அமராவதியே ஆந்திரப் பிரதேசத்தின் நிரந்தரத் தலைநகராகத் திகழும்; சட்டமும் நீதிமன்றங்களும் அதைப் பாதுகாக்கும் என்று முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உறுதி அளித்துள்ளார்.

கடன் அதிகம்
சந்திரபாபு நாயுடுவின் கனவு நிறைவேறிவிட்டது என்றாலும், இனி தான் ரியல் சவால் சந்திரபாபு நாயுடுவிற்கு ஆரம்பம் ஆக போகிறது.. ஏனெனில் ஆந்திர மாநிலத்தின் மொத்தக் கடன் 4.5 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் உயர்ந்துவிட்டது. வருவாயில் பெரும் பகுதி வட்டி கட்டுவதற்கே செலவிடப்படுகிறது.
பணம் வேண்டும்
நாயுடு நினைப்பது போல் உலகத் தரம் வாய்ந்த தலைநகரை உருவாக்கத் தேவைப்படும் கட்டமைப்பு வசதிகளுக்கு பல லட்சம் கோடி ரூபாய் தேவை. மத்திய அரசு வழங்கும் நிதியுதவி என்பது ஒரு தொடக்கத்திற்கு மட்டுமே உதவும், முழுத் திட்டத்தையும் முடிக்க நிச்சயம் போதாது. அத்துடன் கடந்த சில ஆண்டுகளாகத் திட்டத்தில் ஏற்பட்ட தேக்கம், சர்வதேச முதலீட்டாளர்கள் மற்றும் உலக வங்கி போன்ற அமைப்புகளைத் தயக்கம் கொள்ளச் செய்துள்ளது. நம்பிக்கையை மீண்டும் கட்டி எழுப்புவது நாயுடுவின் முன் உள்ள மிகப்பெரிய பொருளாதாரச் சவாலாக இருக்கும். அதேபோல் ஜெகன் மோகன் ரெட்டியும் முழு மனதுடன் அமராவதியை தலைநகராக அங்கீகரிக்க வேண்டும். அவர்ஏற்க மறுத்தால், முதலீட்டாளர்கள் நம்பிக்கையை இழப்பார்கள்.. ஏனெனில் 2029ல் சிக்கல் வரும் என்ற பயம் முதலீட்டாளர்களுக்கு உள்ளது.

முப்போகம் விளையும் பூமி
அதேபோல் நிலம் கையகப்படுத்துதல் என்பது ஒரு நிர்வாக நகருக்கு அடிப்படை, ஆனால் அமராவதியில் அதுவே சிக்கலாகியுள்ளது. அமராவதி அமையும் பகுதி, கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்துள்ள மிகச் சிறந்த ‘ஜரீப்’ வகை நிலங்கள். மூன்று போகமும் விளையக்கூடிய இந்த நிலங்களைச் சிமெண்ட் காடுகளாக மாற்றுவதில் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்ப்பும் உள்ளது. அதேநேரம் நில ஒருங்கிணைப்பு (Land Pooling) முறையில் நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய மனைகள் மற்றும் குத்தகைத் தொகை கடந்த சில ஆண்டுகளில் முறையாக வழங்கப்படாததால் எழுந்த சட்ட வழக்குகளைத் தீர்ப்பது அவசியம். நில உரிமையாளர்களுடன் இணக்கமான சூழலை உருவாக்குவது திட்டத்தின் வெற்றிக்கு மிக முக்கியம் ஆகும்.
பேய் நகரமாக மாறிவிடும்
அதேபோல் வெறும் அரசு அலுவலகங்கள் மட்டுமே இருந்தால், காலை 9 முதல் மாலை 6 மணி வரை மட்டுமே அந்த நகரம் இயங்கும். அலுவலக நேரம் முடிந்ததும் அது ‘பேய் நகரமாக’ மாறிவிடும். குஜராத்தின் காந்தி நகரம் இப்படித்தான் ஒரு காலத்தில் இருந்தது. எனவே மக்கள் நிரந்தரமாகக் குடியேற வேண்டுமென்றால், அங்கு சிறந்த பள்ளிகள், நவீன மருத்துவமனைகள், வணிக மையங்கள், பொழுதுபோக்கு இடங்கள் மற்றும் இரவு நேரப் பொருளாதாரம் அத்தியாவசியம் ஆகும். அதேபோல் அமராவதி நகரம் கிருஷ்ணா நதிக்கரையில் தாழ்வான பகுதியில் உருவாகி வரகறிது. பருவமழைக் காலங்களில் ஏற்படக்கூடிய வெள்ள அபாயத்தைத் தடுக்க பிரம்மாண்டமான வடிகால் அமைப்புகளை உருவாக்குவது மிகவும் கடினமான மற்றும் செலவுமிக்க பணியாக இருக்கும்.. எல்லாவற்றையும் நாயுடு சரி செய்ய வேண்டும். பொறுத்திருந்து பார்ப்போம்.
