சென்னை: தமிழ்நாடு – புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் நேற்று நடைபெற்றது. மாலை 5 மணி நிலவரப்படி 81 சதவீத வாக்குகள் பதிவாகின. ஏப்.3-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
தமிழ்நாடு – புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு 23 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று நடைபெற்றது. இத்தேர்தலில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட மொத்தம் 143 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தமிழகத்தில் 166, புதுச்சேரியில் 2 என மொத்தம் 168 வாக்குச்சாவடிகளில் காலை 10 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.
முதல்முறையாக, இந்த தேர்தலில் மொத்த வாக்காளர்களான ஒரு லட்சத்து 540 வழக்கறிஞர்களின் அனைத்து விவரங்களும் க்யூஆர் கோடு வடிவில் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டன. அந்த படிவம் மற்றும் வழக்கறிஞர் அடையாள அட்டையுடன் வந்தவர்கள் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். க்யூ-ஆர் கோடு குறியீட்டை ஸ்கேன் செய்து, வழக்கறிஞர்களின் விவரங்களை சரிபார்த்து, அவர்களை புகைப்படம் எடுத்த பிறகே வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் மட்டும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். இதற்காக, நீதிமன்றத்தின் எஸ்பிளனேடு நுழைவுவாயில் அருகே கலையரங்கம் பகுதியில் 56 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்புடன் வழக்கறிஞர்கள் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பெண் வழக்கறிஞர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர். மூத்த வழக்கறிஞர்களும் தங்களது நீதிமன்றப் பணிகளுக்கு இடையே வாக்களித்துவிட்டுச் சென்றனர். திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, விசிக தலைவர் திருமாவளவன், பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்டோரும் தங்களது வாக்குகளை சென்னை உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்தனர்.
உச்ச நீதிமன்றத்தில் உள்ள 64 தமிழக வழக்கறிஞர்கள் வாக்களிக்கும் வகையில் உச்ச நீதிமன்றத்திலும் வாக்கு மையம் அமைக்கப்பட்டது. தேர்தல் அதிகாரியான முன்னாள் நீதிபதி கே.என்.பாஷா மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்ட தேர்தல் உயர்நிலைக் குழுத் தலைவரும், இமாச்சல பிரதேச முன்னாள் தலைமை நீதிபதியுமான ராஜிவ் ஷக்தேர், உயர்நிலைக் குழு உறுப்பினர்களான மூத்த வழக்கறிஞர்கள் இ.ஓம் பிரகாஷ், அமித் ஜார்ஜ் ஆகியோர் தேர்தல் பணிகளை மேற்பார்வையிட்டனர். முதல்முறையாக, அனைத்து மாவட்டங்களுக்கும் முன்னாள் நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் தேர்தல் பார்வையாளர்களாக அனுப்பி வைக்கப்பட்டு அமைதியான முறையில் தேர்தல் நடத்தப்பட்டது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, ஏப்.3-ம் தேதி வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது.
