விஜய் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23-ந்தேதி நடை பெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறுகிறது. சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. மனு தாக்கல் செய்ய ஏப்ரல் 6-ந்தேதி கடைசி நாளாகும்.

வேட்புமனு தாக்கல் செய்ய மொத்தம் அவகாசம் குறைவாக இருப்பதால் முதல் நாளான நேற்று முதலே வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய ஆர்வம் காட்டினர்.

அந்த வகையில் சென்னை கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். பெரம்பூர் தொகுதியில் நேற்று அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர், அங்கிருந்து பெரம்பூரில் உள்ள தனது கட்சி அலுவலகம் நோக்கி பிரசார வாகனத்தில் சென்றார். அப்போது, வழியெங்கும் நின்றிருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து பெரம்பூர், கொளத்தூரில் விஜய் பிரசாரம் செய்தார்.

விஜய்யை பார்ப்பதற்கும், அவரது பேச்சை கேட்கவும் ஆண்களும், பெண்களும் என பெருங்கூட்டம் நின்றது. சிலர் சாலை தடுப்புகளை தாண்டி குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து விஜய் பிரசார வாகனம் மக்கள் கூட்டத்தில் இருந்து 500 மீட்டர் தள்ளிநிறுத்தப்பட்டது. இளைஞர்களின் எழுச்சிக்கு மத்தியில் விஜய் தனது முதல் பிரசாரத்தை தொடங்கினார். இதனைத்தொடர்ந்து திருச்சி கிழக்கு தொகுதியில் நாளை மறுநாள் விஜய் தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.

இந்நிலையில் சென்னை கொளத்தூரில் பரப்புரையின்போது தேர்தல் விதிகளை மீறியதாக த.வெ.க. தலைவர் விஜய் மீது பெரவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

5 ஒலிபெருக்கிகளை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தேர்தல் அதிகாரிகளிடம் அளித்த உறுதிமொழியை மீறி 30 ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தேர்தல் அதிகாரி அளித்த புகாரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் 5 ஆயிரத்திற்கும் அதிகமாக பொதுமக்களை திரட்டியதாகவும், பிரசாரத்தின்போது ஆம்புலன்ஸ் பாதையை மறைத்ததாகவும் தேர்தல்நிலை கண்காணிப்பு குழு அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில், விஜய் மீது 5 பிரிவுகளின் கீழ் பெரவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!