நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் திமுக எம்.பி.க்கள் முன்வைக்க வேண்டிய பிரச்சினைகள் தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடைபெறவுள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 13, 14-ல் மட்டும் நாடாளுமன்றத்தில் பணிகள் நடைபெறாது என்று நாடாளுமன்ற விவகாரத் துறை மந்திரி கிரிண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். சுமார் ஒரு மாதம் நடைபெறும் இந்த நீண்ட கூட்டத்தொடரில் பல முக்கிய மசோதாக்களை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்கு பிறகு, முதல்முறையாக நாடாளுமன்றம் கூடுவதால், அந்த நடவடிக்கை குறித்தும், இந்தியா – பாகிஸ்தான் போர்நிறுத்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் தலையீடு குறித்தும் விவாதம் நடைபெறும் எனத் தெரிகிறது. கூட்டத்தொடர் தொடர்பான அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்தநிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அது குறித்து ஆலோசிக்க வரும் 18-ம் தேதி அன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் 18.07.2025 காலை 10.30 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயம் முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும். கட்சியின் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் திமுக எம்.பி.க்கள் முன்வைக்க வேண்டிய பிரச்னைகள் தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
