சிறந்த மருத்துவரும், சமூக ஆர்வலருமான மகேந்திரலால் சர்க்கார் 1833ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி மேற்கு வங்கத்தில் பிறந்தார்.
ஹோமியோபதி மருத்துவம் பற்றி வில்லியம் மார்கன் எழுதிய புத்தகத்திற்கு விமர்சனம் எழுதும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. ஹோமியோபதிக்கு எதிராக தன் கருத்துகளை பதிவு செய்வதற்காகத்தான் முதலில் அந்த நூலைப் படித்தார். ஆனால், படித்து முடித்த பிறகு ஹோமியோபதியின் சிறப்பை உணர்ந்து உரிய பயிற்சி பெற்று ஹோமியோபதி மருத்துவராகப் பணியாற்றத் தொடங்கினார்.
1876ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக ‘இந்தியன் அசோசியேஷன் ஃபார் தி கல்டிவேஷன் ஆஃப் சயின்ஸ்’ என்ற அறிவியல் அமைப்பு இவரால் தொடங்கப்பட்டது. சர்.சி.வி.ராமன் உள்ளிட்ட ஏராளமான அறிவியல் அறிஞர்கள் முக்கிய ஆராய்ச்சிகள் நடத்தி பல அறிவியல் சாதனைகளை நிகழ்த்துவதற்கு இந்த அமைப்பு ஒரு களமாகவும் அமைந்தது.
சிறந்த சமூக ஆர்வலரான மகேந்திரலால் சர்க்கார் 1904ஆம் ஆண்டு மறைந்தார்.
பரிதிமாற் கலைஞர் – இன்று நினைவு தினம்..!!
தமிழுக்கு தொண்டாற்றிய பரிதிமாற் கலைஞர் 1870ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் தேதி மதுரை திருப்பரங்குன்றம் அடுத்த விளாச்சேரியில் பிறந்தார். இவரின் இயற்பெயர் சூரியநாராயண சாஸ்திரியார்.
இவர் தமிழ் மொழி, தத்துவத்தில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று தங்கப்பதக்கம் வென்றார். செந்தமிழ் நடையில் சுவைபட விவரிக்கும் இவரின் ஆற்றலில் ஈர்க்கப்பட்டு, பிற துறை மாணவர்களும் இவரது வகுப்புக்கு வந்து ஆர்வத்துடன் பாடம் கேட்பார்கள்.
தமிழ் அறிவும், ஆர்வமும் கொண்ட மாணவர்களுக்கு தொல்காப்பியம், நன்னூல், சைவ சமய சாஸ்திர நூல்களைக் கற்பித்தார். சென்னை செந்தமிழுரைச் சங்கத்தை நிறுவினார்.
இவர் சூரியநாராயண சாஸ்திரியார் என்ற தனது வடமொழிப் பெயரை பரிதிமாற் கலைஞர் என தமிழில் மாற்றிக்கொண்டார். இவர் ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.
தமிழை செம்மொழி என முதன்முதலில் மெய்ப்பித்த மற்றும் தமிழர் முன்னேற்றத்திற்காக வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட பரிதிமாற் கலைஞர் 1903ஆம் ஆண்டு மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
1965ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி இந்திய திரைப்பட நடிகர் சாருக் கான் பிறந்தார்.
1950ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி நோபல் பரிசு பெற்ற ஐரிய எழுத்தாளர், ஜார்ஜ் பெர்னாட் ஷா மறைந்தார்.
