தமிழ்நாட்டில் மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு..!

2019-ல் தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான வைகோ, பி.வில்சன், சண்முகம், முகமது அப்துல்லா, அன்புமணி மற்றும் சந்திரசேகரன் ஆகியோரது பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, 6 இடங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.

வேட்புமனு தாக்கலுக்காக தமிழக சட்டப்பேரவைச் செயலக கூடுதல் செயலர் சுப்பிரமணியன் தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாக பேரவைச் செயலக இணைச் செயலர் கே.ரமேஷ் ஆகியோரும் நியமிக்கப்பட்டனர்.

திமுக சார்பில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், பி.வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம் ஆகியோரும், அதிமுக சார்பில் தனபால், ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோரும் அறிவிக்கப்பட்டனர். கடந்த 2-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. முதல் நாளில் பத்மராஜன் உள்ளிட்ட 2 சுயேச்சைகள் மனு தாக்கல் செய்தனர்.

அதேபோல, அதிமுக சார்பில் ஐ.எஸ்.இன்பதுரை, ம.தனபால் ஆகியோர் மனுதாக்கல் செய்தனர். தருமபுரி மாவட்டம் பெண்ணாகரத்தைச் சேர்ந்த அக்னி ஆழ்வார் என்பவர் சுயேச்சையாக மனு தாக்கல் செய்தார். தற்போது வரை 6 பதவியிடங்களுக்கு 17 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இதனிடையே, வேட்புமனு தாக்கல் கடந்த 2 ஆம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவுபெற்றது. நாளை மனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. வரும் 12-ம் தேதி மாலை வரை மனுக்களை திரும்பப் பெற அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் போட்டியிருந்தால் வரும் 19-ம் தேதி தேர்தல் நடைபெறும்.

வேட்பு மனுவுடன் ஒரு வேட்பாளருக்கு 10 எம்எல்ஏக்கள் முன்மொழிவு கடிதம் அளித்திருக்க வேண்டும். அந்த அடிப்படையில், சுயேச்சை வேட்பாளர்களுக்கு முன்மொழிவு கடிதம் இல்லை என்றால், அவர்களின் மனுக்கள் நிராகரிக்கப்படும். திமுக, அதிமுகவைச் சேர்ந்தவர்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்படுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!