ரெயில்வே நடைமேடை அமைக்கும் பணிகள் 80 சதவீதம் நிறைவு பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூர் அருகே கிளாம்பாக்கம் பகுதியில் ரூ.400 கோடியில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. இங்கிருந்து, தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து கிளாம்பாக்கம் எதிரில் ரெயில் நிலையம் அமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கை எழுந்தது. தொடர்ந்து, தெற்கு ரயில்வே சார்பில் ரூ.20 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கியது. அதன்படி, வண்டலூர்- கூடுவாஞ்சேரி இடையே கிளாம்பாக்கத்தில் 3 நடைமேடைகளுடன் ரெயில் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.
இதில், 2 நடைமேடைகள் அமைக்கும் பணிகள் முடிவடைந்து விட்ட நிலையில், 3-ஆவது நடைமேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ரெயில் நிலையத்தில் இருந்து, 500 மீட்டர் தொலைவில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இதனால், கிளாம்பாக்கம் ரெயில் நிலையத்தில் இருந்து பேருந்து நிலையத்துக்கு எளிதில் சென்று விடலாம். இது தென்மாவட்ட மக்களுக்கு பெரும் வசதியாக அமைந்துள்ளது.
இதேபோல, ரூ.79 கோடியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் மையப் பகுதியை அடையும் வகையில் சுமார் 400 மீட்டர் தொலைவில் ஆகாய நடைபாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில், நகரும் படிக்கட்டுகள் (எஸ்கலேட்டர்) மற்றும் மின் தூக்கி (லிப்ட்) ஆகியவற்றுடன் கூடிய நடை மேம்பாலம் அமைய உள்ளது.
இந்த நிலையில், கிளாம்பாக்கம் ரெயில் நிலையம் அமைக்கும் பணிகள் வரும் 30 நாள்களுக்குள் முடிவடைந்து விடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரெயில்வே நடைமேடை அமைக்கும் பணிகள் 80 சதவீதம் நிறைவு பெற்றது என்றும், ரெயில் நிலையத்திற்கான முகப்பு கட்டமைப்பு, பயணிகள் நிழற்குடை, கழிவறை உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்றும் தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
